இன்றோ நாளையோ இறக்கவிருக்கும் மரங்களில் இளமையோடு துளிர்க்கும் மலர் சிசுக்களாய்... புதுப்புது எதிர்பார்ப்புகளோடும் விடை தெரியா கேள்விகளோடும் என் கிழட்டுக் காதல்; ◙
தள்ளாடித் தள்ளாடித் தேடுகின்றேன் தொலைந்து போன பழைய நினைவுகளை... ◙
அந்த மரத்தில் தானே செதுக்கினோம் உன் பெயரை நானும்... என் பெயரை நீயும்...?
எம்மைப் போலவே- காலம் மரத்தையும் விட்டுவைதில்லை நரைத்த தலையுடன் நின்றிருக்கிறது. ◙
புதுப்புது காதல் தடங்களை தாங்கியிருக்கிறது படுத்துறங்கிய புல்வெளி! ◙
இந்த இடத்தில் தானே கைக்கோர்த்து நடைபயின்றோம் ? ஆமாம்! இதே இடம் தான்!
இருமருங்கிலும் எழுந்து நின்று நிழல் பாய் விரித்து காதலர்களை வரவேற்கும் பெயர் தெரியா இம்மரங்கள் "அவள் எங்கே?" உன்னை தான் விசாரிக்கின்றன ◙
இந்த மரங்களுக்கு நினைவிருக்கும் நம் காதல் உனக்கு நினைவிருக்குமோ? ◙
நீ பற்றியிருந்த என் கரங்களில் தொற்றியிருக்கும் என் பேரனின் குரல் இழுத்தெடுக்கிறது என்னை மீண்டும் நிகழ்காலத்துக்கு "தாத்தா நேரமாகிவிட்டது பாட்டி தேடுவாங்க" ◙
என் கேள்விக்கு இல்லாவிட்டாலும் அந்த மரங்களின் கேள்விக்காவது விடை சொல் "நீ எங்கே இருக்கிறாய்?"
http://jawid-raiz.blogspot.com/2010/03/blog-post_17.html
ReplyDeleteகவிதைகளை பிரசுரிக்கும் போதும் உரிமையாளரின் பெயரை மறந்து விடாதீர்கள். குறைந்தது அனுமதியாவது பெற வேண்டும் நண்பா
ReplyDelete